Friday, June 7, 2013

மௌனப் பெருநிழல்























••
அங்கொரு மரநிழல் அழைக்கிறது
நான் போகிறேன் யார் வருகிறீர்கள் ?


எண்ண ஜுவாலைகள் 
எரித்த உயிரின் சுவர்களை 
எல்லாக் கரங்களாலும் 
தொட்டுக் குளிர்விக்கும் 
நேச நிழலது ;
நான் போகிறேன் 
யார் வருகிறீர்கள் ?

புறம் பேசும் தீக்குணத்தை 
மௌன மருந்திட்டு 
மாற்றியனுப்பும் 
சிகிச்சைக்குக் போகிறேன் 
வருபவர்கள் வரலாம் !

வெறுப்பின் முதுகை 
நிழலின் கசையடி கிழித்தெறியும் !
அன்பே மந்திரம் 
அன்பே சத்தியம் 
அன்பே அத்தனையுமென 
நெஞ்சில் எழுதியனுப்பும் 
மரக்கவிஞனின் 
நிழற்குடிசைக்குப் போகிறேன் 
வந்தால் உங்களையும் கூட்டிப் போவேன் !

நெஞ்சுக்குள் நஞ்சேற்றும் 
பொறாமைகளைக் 
கொஞ்சம் கொஞ்சமாய் தின்றழிக்கும் 
மௌனப் பெருநிழலில் 
மகிழ்ந்திருக்கப் போகிறேன் !
பேசாமல் யார் என்னோடு வருகிறீர்கள் ?

பழிக்கும் வஞ்சமும் 
குற்றங்கானும் கூட்டமும் 
குரங்காகவே இருக்கும் 
மனிதர்களே இல்லாத 
மரநிழல் ஒன்றிருக்கிறது 
கொஞ்சம் போய் 
அமைதியாய் இளைப்பாறுகிறேன்..
நீங்களும் வாருங்களேன் !

அறிவுச்செருக்கை 
கன்னத்தில் அறைந்து 
அமைதியே பேரறிவு 
மௌனமே மாதவம் 
நிசப்தமே நிலையான நிலையென 
உணர்த்தும் குளிர்நிழல் 
ஒன்றிருக்கிறது என் உயிருக்கு அருகில் 
கொஞ்ச நேரம் அங்கு 
போய்விட்டு வருகிறேன் !

ஆயிரம் ஆட்டமாடி அடங்கி 
அமர்ந்திருக்கிறானே 
யாரோ ஒருவன்...
அவன் உணரும் 
நிம்மதியின் நிழல் 
எனக்கும் வேண்டும் 
நான் அவனிருக்கும் 
நிழலுக்குப் போகிறேன் !

கோடிகளில் மூழ்கிப் போன 
பணப்பிணங்கள் யாரும் 
என்னோடு வரவேண்டாம் 
கொஞ்சம் அன்பிருப்பினும் 
கொட்டிச் செலவழிக்கும் 
ஏழைகள் வாருங்கள் !

என்னோடு வாருங்கள் 
அது ஏழைகளுக்கான மரநிழல் 
அன்பானவர்களின் வாஞ்சை நிழல் 
மௌனப் பேரரசர்களின் மாகாண நிழல் !
எல்லாம் இருந்தும் எதுவும் நிலையில்லை 
என உணர்ந்த தெய்வங்களின் திருவடி நிழல் !
மௌனப் பெருநிழல் !

நான் போகிறேன் 
என்னோடு வருபவர்கள் வாருங்கள் 
இளைப்பாறலாம் !
••
பிரபாகரன் சேரவஞ்சி

1 comment: