Friday, November 1, 2013

இனியும் நம்புவோம்.இனியும் தோற்போம்.

நாம் கடந்து வந்த பாதையை , நடந்து கொண்டே நம்மோடு இதைப்போலொரு மழையிரவில் பொறுமையாய் கேட்டுக் கொண்டு வரும் மனிதர்கள் கிடைப்பது அரிது. 'ஹ்ம்ம்' கொட்டிக் கடந்து போகும் மனிதர்களைப் போல அல்ல இவர்கள். 

கேட்கிற காதுகள் சிலருக்கு மட்டுமே உண்டு. கேட்டதை புரிந்து கொள்பவர்கள் அதிலும் சிலர். மேலும் நாம் யாரென நம் நிஜத்தின் பிம்பமெல்லாம் பார்த்தறிந்தவர்கள் அதையே பின்னாளில் நமக்கெகெதிரான ஆயுதமாய்ப் பயன் படுத்தித் தோற்கடிக்க வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாது தோள் கொடுத்து நிற்பவர்கள் அதனினும் இன்னும் சிலர்.

இந்தக் கடைசி இன்னும் சிலரில் இருப்பவர்களைக் தேடிக் கண்டடைய இதற்கு முன் இருக்கும் எத்தனை இன்னும் சிலரிடம் தோற்க வேண்டி இருக்கிறது.

எப்படியோ தோற்றே பழகி அதுவும் நிலையாகி விட்டது. தேடலை நிறுத்துவானேன். இனியும் நம்புவோம்.இனியும் தோற்போம். கடைசி சிலருக்குள் இருக்கும் சிலராவது நம் வாழ்க்கையில் கிடைக்காமலா போய் விடுவார்கள் ?

எல்லாம் நன்மைக்கே



Friday, July 5, 2013

தூரத்துப் பச்சை




••
தூரத்துப் பச்சை மரத்தின் உச்சியில்
ஒரு கடவுள் இருக்கிறான்
என்றாரோ சொன்னார்கள்
ஓடோடிச் சென்று
மேலேறிப் பார்த்தேன் !

ஓங்கியடித்த ஊதக்காற்றும்
அதைத்
தாங்கிக்கொண்டென்னைப்
பார்த்த இலைகளும்
ஒருகுரலெடுத்துப் பேசின...

கீழிறங்கிப் போய்
நிலத்திருக்கும் உயிர்களை நேசி!
நீ ஒரு கடவுள்
நீ நேசிப்பவன் ஒரு கடவுள்...

எத்தனை உயிர்களை
நேசிக்கிறாயோ
அத்தனை கடவுளை
நிலமிசை காண்கிறாய் ...!

ஓய்ந்தது பெருங்காற்று
உண்மையுணர்ந்து
கீழிறங்கினேன் !
••
பிரபாகரன் சேரவஞ்சி

கொஞ்சம் இளைப்பாறுங்கள்


••
நம்மை நேசிக்க முடியாதவர்களுக்கு 
பெருந்தன்மையோடு 
ஒரு மன்னிப்பு மட்டும் வழங்கி 
நாம் நம் வழியில் பயணிப்போம் !
••
பாப்லோ நெருடா


••
மின்னிக் கண்ணைப் பறிக்கிறது 
வாழ்கையெனும் வண்ணப் பொய். 
பல நேரம் ரசிக்கிறேன் , 
சிலநேரம் நீ பொய் பொய்யெனத் 
திட்டிக்கொண்டு மௌனிக்கிறேன் !
••
                                                                        பிரபாகரன் சேரவஞ்சி


••
இதயத்திலிருந்து புறப்படும் வார்த்தைகளை மட்டும் 
உதடுகளுக்கு வெளியில் செல்ல அனுமதியுங்கள். 
அறிவாளியாகப் பேசுவது நாம் தேடிக் கொண்ட 
செயற்கைத் தனம் .
அன்பாகப் பேசுவது நம் பிறவிக்குணம். 
அது ஆதியிலிருந்தே இருக்கிறது. 
அதுதான் சாஸ்வதம். அதுதான் இயற்கை.
அதுதான் எதார்த்தம். 
••
             பிரபாகரன் சேரவஞ்சி


••
பிஞ்சுக் குழந்தையின் பூவிரல்களைப் போன்றது வாழ்க்கை.
அதைக் கையாள்கிற விதத்தில் கையாண்டால் 
மெய்பறித்துக் கொண்டுபோகும் சிரிப்பைப் பரிசாய்த் தரும் !
••
             பிரபாகரன் சேரவஞ்சி


••
பிறர் மேல் உமிழும் வெறுப்பு
நம்மை முதலில் அசிங்கப்படுத்துகிறது!
••
           பிரபாகரன் சேரவஞ்சி


••
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்களுக்கும் 
இந்த உலகம் கொடுக்கும் பரிசென்னவோ 
சுயநலக்காரன் என்னும் பட்டம் தான் !
••
        பிரபாகரன் சேரவஞ்சி


••
எல்லா நல்லொளியும் 
தின்றோங்கும் 
இரவையும் 
மென்று தீர்க்க 
ஒரு பகலுண்டு !
••
            பிரபாகரன் சேரவஞ்சி


அத்தனை அழகாகவும் ஒருவன் வாழ்ந்துவிட்டால் , 
அவனைப் பார்க்கக் கொஞ்ச நாளில் சலித்துப் போய்விடும். 
ஏதேனும் குறையுள்ளவனே வாழ்வின் எல்லா நிலையிலும் பேரழகன். 
அவனிடம் கடைசி வரை ரசிக்க ஏதேனும் புதிதாய் உருவாகிக் கொண்டே இருக்கும்.
••
            பிரபாகரன் சேரவஞ்சி

••
பைத்தியக்கார உலகம்!
நம் பொறுமையைக்
கண்டு சிரிக்கும்
அளவிற்குத்தான் 
வளர்ந்திருக்கிறது!
பாவமிது
பைத்தியக்கார உலகம்!
••

Friday, June 7, 2013

அதன் பின்னும் நேசிப்பேன்


எத்தனை வெறுப்பை சுமர்த்தி 
நீங்கள் என் பாரம் கூட்டினாலும் 
மனமுடைந்து போகமாட்டேன்...

மிரட்டி நிற்கும் 
வெறுப்பின் பயமின்றி

உயிரை 
புரட்டிப் போடும் புறக்கணிப்பின் 
கோரமுகம் பார்த்து ரசித்து...

என் வழியில் இன்னும் கொஞ்சம்
ஆழமாய் நேசித்தே கிடப்பேன்...

நீங்கள் விரும்பினால் அதன் பின்னும்
என்னுடன் இருக்கலாம்...

அதன் பின்னும் நேசிப்பேன் !

பூக்களைப் போல் வாழ்கிறேன்






















எனது சிறுபிள்ளைத் 
தனமான பேச்சுக்களை 
ரசித்தார்கள் !
எனது மௌனமான 
நற்குணங்களைப் பழித்தார்கள் !
என்ன உலகமிது என 
யோசித்துக் கொண்டிருக்கையில் 
அங்கே பிறந்தது 
எனக்கான தனி உலகம்..
ஆளரவமற்ற தனிமை
எங்கெங்கும் நிம்மதியின் நிழல் !
உயிரைப் பழிக்கும் 
எந்த முரணுமில்லை 
என்னைச் சுற்றி இப்போது !
மலையருவி முத்தமிட்டுக் 
குளிர்விக்கும் 
மஞ்சள் பூக்களின் புன்னகை 
எவ்வளவு அழகோ 
அவ்வளவு அழகாய் 
அமைதியாய் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !
••
பிரபாகரன் சேரவஞ்சி
Inspired from a thought of Kahlil Gibraan.

மௌனப் பெருநிழல்























••
அங்கொரு மரநிழல் அழைக்கிறது
நான் போகிறேன் யார் வருகிறீர்கள் ?


எண்ண ஜுவாலைகள் 
எரித்த உயிரின் சுவர்களை 
எல்லாக் கரங்களாலும் 
தொட்டுக் குளிர்விக்கும் 
நேச நிழலது ;
நான் போகிறேன் 
யார் வருகிறீர்கள் ?

புறம் பேசும் தீக்குணத்தை 
மௌன மருந்திட்டு 
மாற்றியனுப்பும் 
சிகிச்சைக்குக் போகிறேன் 
வருபவர்கள் வரலாம் !

வெறுப்பின் முதுகை 
நிழலின் கசையடி கிழித்தெறியும் !
அன்பே மந்திரம் 
அன்பே சத்தியம் 
அன்பே அத்தனையுமென 
நெஞ்சில் எழுதியனுப்பும் 
மரக்கவிஞனின் 
நிழற்குடிசைக்குப் போகிறேன் 
வந்தால் உங்களையும் கூட்டிப் போவேன் !

நெஞ்சுக்குள் நஞ்சேற்றும் 
பொறாமைகளைக் 
கொஞ்சம் கொஞ்சமாய் தின்றழிக்கும் 
மௌனப் பெருநிழலில் 
மகிழ்ந்திருக்கப் போகிறேன் !
பேசாமல் யார் என்னோடு வருகிறீர்கள் ?

பழிக்கும் வஞ்சமும் 
குற்றங்கானும் கூட்டமும் 
குரங்காகவே இருக்கும் 
மனிதர்களே இல்லாத 
மரநிழல் ஒன்றிருக்கிறது 
கொஞ்சம் போய் 
அமைதியாய் இளைப்பாறுகிறேன்..
நீங்களும் வாருங்களேன் !

அறிவுச்செருக்கை 
கன்னத்தில் அறைந்து 
அமைதியே பேரறிவு 
மௌனமே மாதவம் 
நிசப்தமே நிலையான நிலையென 
உணர்த்தும் குளிர்நிழல் 
ஒன்றிருக்கிறது என் உயிருக்கு அருகில் 
கொஞ்ச நேரம் அங்கு 
போய்விட்டு வருகிறேன் !

ஆயிரம் ஆட்டமாடி அடங்கி 
அமர்ந்திருக்கிறானே 
யாரோ ஒருவன்...
அவன் உணரும் 
நிம்மதியின் நிழல் 
எனக்கும் வேண்டும் 
நான் அவனிருக்கும் 
நிழலுக்குப் போகிறேன் !

கோடிகளில் மூழ்கிப் போன 
பணப்பிணங்கள் யாரும் 
என்னோடு வரவேண்டாம் 
கொஞ்சம் அன்பிருப்பினும் 
கொட்டிச் செலவழிக்கும் 
ஏழைகள் வாருங்கள் !

என்னோடு வாருங்கள் 
அது ஏழைகளுக்கான மரநிழல் 
அன்பானவர்களின் வாஞ்சை நிழல் 
மௌனப் பேரரசர்களின் மாகாண நிழல் !
எல்லாம் இருந்தும் எதுவும் நிலையில்லை 
என உணர்ந்த தெய்வங்களின் திருவடி நிழல் !
மௌனப் பெருநிழல் !

நான் போகிறேன் 
என்னோடு வருபவர்கள் வாருங்கள் 
இளைப்பாறலாம் !
••
பிரபாகரன் சேரவஞ்சி

மௌனப்பெரும்புயல்


••
மௌனப் பெரும்புயலொன்று மனதை 
சுழன்றடித்துக் கடந்து போனது ..
சப்தங்கள் சலனங்கள் நிறைந்த 
இயல்புக்கு மீண்டும் 
திரும்பி விட்டது வாழ்க்கை..
இருந்தும் வர்ணிக்க முடியாத 
தீராக்காதலை உயிர் முழுக்க 
ஓட்டிச் சென்ற புயலை 
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்..
புயல் தரும் ஆறுதல்
பூமியில் எங்குமே இல்லை..
மௌனப்பெரும்புயல் மனதின்
மாபெரும்வரம்
மாபெரும் தவம் ..!
••

Be a Horse - ஒரு குட்டிக் கதை பெரிய்ய நீதி





••
வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்..
••

You are blessed Soul then



••
நீ சிரித்துக் கொண்டே 
மரணித்தாலும் 
அழுது அத்தனை கண்ணீரையும் 
இழந்து மயங்கும் 
யாரோ ஒருவரின்
அன்பைப் பெற்றுவிட்டால் போதும்
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் !
••