Friday, July 5, 2013

தூரத்துப் பச்சை




••
தூரத்துப் பச்சை மரத்தின் உச்சியில்
ஒரு கடவுள் இருக்கிறான்
என்றாரோ சொன்னார்கள்
ஓடோடிச் சென்று
மேலேறிப் பார்த்தேன் !

ஓங்கியடித்த ஊதக்காற்றும்
அதைத்
தாங்கிக்கொண்டென்னைப்
பார்த்த இலைகளும்
ஒருகுரலெடுத்துப் பேசின...

கீழிறங்கிப் போய்
நிலத்திருக்கும் உயிர்களை நேசி!
நீ ஒரு கடவுள்
நீ நேசிப்பவன் ஒரு கடவுள்...

எத்தனை உயிர்களை
நேசிக்கிறாயோ
அத்தனை கடவுளை
நிலமிசை காண்கிறாய் ...!

ஓய்ந்தது பெருங்காற்று
உண்மையுணர்ந்து
கீழிறங்கினேன் !
••
பிரபாகரன் சேரவஞ்சி

கொஞ்சம் இளைப்பாறுங்கள்


••
நம்மை நேசிக்க முடியாதவர்களுக்கு 
பெருந்தன்மையோடு 
ஒரு மன்னிப்பு மட்டும் வழங்கி 
நாம் நம் வழியில் பயணிப்போம் !
••
பாப்லோ நெருடா


••
மின்னிக் கண்ணைப் பறிக்கிறது 
வாழ்கையெனும் வண்ணப் பொய். 
பல நேரம் ரசிக்கிறேன் , 
சிலநேரம் நீ பொய் பொய்யெனத் 
திட்டிக்கொண்டு மௌனிக்கிறேன் !
••
                                                                        பிரபாகரன் சேரவஞ்சி


••
இதயத்திலிருந்து புறப்படும் வார்த்தைகளை மட்டும் 
உதடுகளுக்கு வெளியில் செல்ல அனுமதியுங்கள். 
அறிவாளியாகப் பேசுவது நாம் தேடிக் கொண்ட 
செயற்கைத் தனம் .
அன்பாகப் பேசுவது நம் பிறவிக்குணம். 
அது ஆதியிலிருந்தே இருக்கிறது. 
அதுதான் சாஸ்வதம். அதுதான் இயற்கை.
அதுதான் எதார்த்தம். 
••
             பிரபாகரன் சேரவஞ்சி


••
பிஞ்சுக் குழந்தையின் பூவிரல்களைப் போன்றது வாழ்க்கை.
அதைக் கையாள்கிற விதத்தில் கையாண்டால் 
மெய்பறித்துக் கொண்டுபோகும் சிரிப்பைப் பரிசாய்த் தரும் !
••
             பிரபாகரன் சேரவஞ்சி


••
பிறர் மேல் உமிழும் வெறுப்பு
நம்மை முதலில் அசிங்கப்படுத்துகிறது!
••
           பிரபாகரன் சேரவஞ்சி


••
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்களுக்கும் 
இந்த உலகம் கொடுக்கும் பரிசென்னவோ 
சுயநலக்காரன் என்னும் பட்டம் தான் !
••
        பிரபாகரன் சேரவஞ்சி


••
எல்லா நல்லொளியும் 
தின்றோங்கும் 
இரவையும் 
மென்று தீர்க்க 
ஒரு பகலுண்டு !
••
            பிரபாகரன் சேரவஞ்சி


அத்தனை அழகாகவும் ஒருவன் வாழ்ந்துவிட்டால் , 
அவனைப் பார்க்கக் கொஞ்ச நாளில் சலித்துப் போய்விடும். 
ஏதேனும் குறையுள்ளவனே வாழ்வின் எல்லா நிலையிலும் பேரழகன். 
அவனிடம் கடைசி வரை ரசிக்க ஏதேனும் புதிதாய் உருவாகிக் கொண்டே இருக்கும்.
••
            பிரபாகரன் சேரவஞ்சி

••
பைத்தியக்கார உலகம்!
நம் பொறுமையைக்
கண்டு சிரிக்கும்
அளவிற்குத்தான் 
வளர்ந்திருக்கிறது!
பாவமிது
பைத்தியக்கார உலகம்!
••